தேன்நிலவில் கணவருடன் உறவில் ஈடுபடாவிட்டால் விவாகரத்து வழங்க முடியாது: மும்பை ஹைகோர்ட்
மும்பை: தம்பதிகளில் ஒருவர் தேன்நிலவின்போது, உறவில் ஈடுபட மறுப்பு தெரிவிப்பது துன்புறுத்தலானது ஒன்றும் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில் குடும்ப நீதிமன்றம் ஒன்று தனது கணவருக்கு சாதகமாக, விவாகரத்து வழங்கியதை எதிர்த்து 29 வயது நிறைந்த அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
அதனை, வி.கே. தஹில்ரமணி மற்றும் பி.என். தேஷ்முக் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
சிறுசிறு சண்டைகள்
அனைத்து குடும்பங்களிலும் அன்றாடம் நடக்கும், சிறு சிறு சண்டைகள், எரிச்சல்கள், திருமண வாழ்க்கையில் ஏற்படும் வழக்கமான சச்சரவுகள் ஆகியவை துன்புறுத்துதல் (கொடூரம்) என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்க போதுமான அடிப்படை காரணங்கள் ஆகாது.
குடும்ப வாழ்க்கை
சில தனிப்பட்ட சம்பவங்கள் குறிப்பிட்ட காலத்தில் நடந்திருந்தால் அது துன்புறுத்துதல் ஆகாது. மண வாழ்க்கை முழுவதுமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
மனைவியின் உடைகள்
ஒரு மனைவி சர்ட்ஸ் மற்றும் பேண்ட்ஸ் அணிந்து அலுவலகத்திற்கு சென்று விட்டு பின்பு அலுவல் பணியாக நகரத்தை விட்டு வெளியே செல்வது என்பன போன்ற நிகழ்வுகள் திருமணத்திற்கு பின்பு நடந்தாலும், அவை கணவருக்கு ஏற்படுத்திய துன்புறுத்தலான விசயமாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்றும் தங்களது தீர்ப்பில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனிலவில் செக்ஸ்
அதனுடன், தேன்நிலவில் செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு தெரிவிப்பதும் விவாகரத்து வழங்க போதுமான விசயமாக கருத்தில் கொள்ளப்படாது.
மனுவில் கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் எழுத்துபூர்வ அறிக்கை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்துள்ளதுடன் நாங்கள் இரு தரப்பு சாட்சிகளையும் நன்றாக ஆய்வு செய்துள்ளோம்.
விவாரத்து தீர்ப்பு ரத்து
எனவே, அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இது போன்ற நிகழ்வுகளால் திருமணத்தை ரத்து செய்து விட முடியாது. இந்த விசயத்தில் மேல் முறையீடு ஏற்று கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள நீதிபதிகள் குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.