அறை தர மறுத்த மும்பை ஹோட்டல்கள்... இரவு முழுவதும் பிளாட்பார்மில் தவித்த பாகிஸ்தான் குடும்பம்!
மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் குடும்பத்தினருக்கு ஹோட்டல்களில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பையின் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்ஹாவிற்கு 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வந்திருந்தது. இந்நிலையில் மும்பையின் ஒரு ஹோட்டல் கூட அவர்களுக்கு தங்குவதற்கு இடம் தரவில்லை.
இரவு நேரம் என்பதால் ஜோத்பூரில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் செல்ல முடியாத காரணத்தினால் 3 பெண்களும், ஒரு சிறுவனும் அடங்கிய அந்தக் குடும்பம் நடைபாதையிலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளது.
கடந்த வாரம் இந்தியா வந்த அக்குடும்பம், ஜோத்பூரில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கி வந்துள்ளது. ஹாஜி அலி தர்ஹாவிற்கும், பாலிவுட் ஹீரோ சல்மான் கானைக் காண்பதற்குமே அவர்கள் மும்பை வந்துள்ளனர்.
ஹாஜி அலி தர்ஹா சென்றபின் தங்க இடம் தேடிய பொழுதுதான் பிரச்சினை துவங்கியுள்ளது. "ஒரு ஹோட்டலின் அருகில் என் குடும்பத்தினை நிறுத்தி விட்டு இடம் தேடினால் மாலை வரை எந்த ஹோட்டலிலும், லாட்ஜிலும் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை" என்று அக்குடும்ப உறுப்பினரான ஷகீல் அமீது என்பவர் சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணான நூர் பானு கூறுகையில், "நாங்கள் மும்பை நகரத்தையோ, காவல் துறையையோ மற்றும் பொது மக்களையோ குற்றம் சொல்லவில்லை. எங்களுக்கு தங்க ஏன் ஹோட்டல்களில் அறை தரவில்லை என்று தான் புகார் கூறுகிறோம். நாங்கள் பஜ்ரங்கி பைஜான் படத்தினைப் பார்த்து சல்மான் கானுக்கு மிகப்பெரிய விசிறிகள் ஆகிவிட்டோம். அதனால்தான் அவரை பார்க்க வந்தோம். ஆனால், இந்த சோகமான விஷயத்தால் நாங்கள் தற்போது ஊர் திரும்ப உள்ளோம்" என்று தெரிவித்தார்.
"ஒன்றிரண்டு பேர் செய்யும் தவறுகளுக்காக எல்லா பாகிஸ்தானியரும் கெட்டவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்" என்று அமீது சோகத்துடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.