அடுத்த ஆட்சி அமைவது சோனியா கையிலோ, மோடி கையிலோ இல்லை.. பிராந்திய கட்சிகள் கையில்தானாம்!
டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் அடுத்த ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளில் பிராந்திய கட்சிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ஒரு சர்வே கூறுகிறது.
மேலும் தற்போதைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே முன்னணியில் உள்ளதாகவும் இந்த சர்வேத தெரிவிக்கிறது.
அதை விட முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பிராந்தியக் கட்சிகள் தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ இல்லாத கட்சிகள் என்றும் இந்த சர்வே குண்டைத் தூக்கிப் போடுகிறது.
இந்தியா டிவி- டைம்ஸ் நவ் சர்வே
இந்தியா டிவி- டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய சர்வேயில்தான் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக. 16 முதல் அக். 15 வரை
ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நாடு முழுவதும் 24,284 பேரிடம் இந்த சர்வேயை நடத்தியுள்ளனர்.
ஆந்திரா, உ.பி, ராஜஸ்தான், கேரளாவில் காங்.குக்கு வீழ்ச்சி
இதில், ஆந்திரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸுக்கு பெரும் வீழ்ச்சி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் பாஜக கை ஓங்குகிறது
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு இந்த முறை நல்ல லாபம் கிடைக்குமாம். நிறைய சீட்களை அது வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பீகாரிலும், ராஜஸ்தானிலும் பாஜகவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காங். அடி வாங்கும்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கரில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில், முதல் மூன்று மாநிலங்களில் காங்கிரஸுக்கு வீழ்ச்சி கிடைக்குமாம். அதேசமயம், சட்டீஸ்கரில் அதற்கு சாதகமான நிலை காணப்படுவதாக சர்வே கூறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 186 இடங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபா தேர்தலில் 186 இடங்கள் கிடைக்கும் என இந்த சர்வே முடிவு தெரிவிக்கிறது.
காங். கூட்டணிக்கு 117 கிடைக்கலாம்
அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்கள் கிடைக்கலாமாம்.
மற்றவர்கள் கையில் ஊசலாடப் போகும் ஆட்சி
அதிமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், திரினமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா கட்சி ஆகியவற்றின் கையில்தான் வரும் மத்திய அரசு அமைவது இருக்குமாம்.
இவர்களுக்கு 240 சீட்கள்
இந்த கட்சிகளுக்கு மொத்தமாக 240 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய விஷயம். அதாவது காங் கூட்டணி, பாஜக கூட்டணியை விட அதிக இடங்களை இந்த பிராந்தியக் கட்சிகள்தான் பெறப் போகின்றன என்பது புதிய விஷயமாகும்.
38 சதவீத ஓட்டுக்கள்
இந்த பிற கட்சிகளுக்கு மொத்தமாக 38 சதவீத ஓட்டுக்கள் கிடைக்குமாம். இதுவும் காங், பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் விஷயம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 35 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 27 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும் என்று இந்த கணிப்பு கூறுகிறது.
பாஜகவுக்கு 162 -காங்.குக்கு 102
தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு 162 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 102 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்த சர்வே கூறுகிறது.
இறுதியில் கஷ்டப் படப் போவது மக்கள்தான்... காரணம், குதிரை பேரத்தின் கோரத்தைக் கண்டு அதிர்ச்சி அடையப் போவது அவர்கள்தானே...