தேவ்யானி விவகாரத்தில் யு.எஸ். மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் இந்தியா திட்டவட்டம்!
டெல்லி: உலகமும், காலமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவ்யானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவ்யானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்தியா வற்புறுத்தி வருகிறது.
அமெரிக்காவை பணிய வைக்கும் வகையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த பிரச்சினையில் சம்பிரதாயப்படி வருத்தம் மட்டுமே தெரிவித்த அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்க மறுப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெறவும் பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்துடன் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கமல்நாத், தேவ்யானி விவகாரத்தில் அமெரிக்கா தெளிவான, முழுமையான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்றார்,
இதனிடையே வழக்குகளை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்து வந்தாலும் இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்று, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே மதிப்பு மிக்க நல்லுறவு இருந்து வருவதை நன்கு உணர்ந்து இருக்கிறேன். அரசுகள் மட்டும் அன்றி தனி நபர்களும், அமைப்புகளும் ஏராளமான அளவுக்கு முதலீடு செய்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நல்லுறவை பேணுவது அவசியம். அதேபோல் அவர்களும் இதே அளவுக்கு கவனமாக இருப்பார்கள் என்று கருதுகிறேன் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.