அம்மாடி ஒரு வழியாக நாடாளுமன்றம் பக்கம் அரை மணிநேரம் வந்து சென்ற நடிகை ரேகா
டெல்லி: நாடாளுமன்றத்திற்கு பிரபலங்கள் வருவது இல்லை என்று பிரச்சனை கிளம்பிய பிறகு நடிகை ரேகா செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்திற்கு அரை மணிநேரம் வந்துவிட்டு சென்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ரேகா உள்ளிட்டோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவைக்கு வருவது இல்லை என்று பிரச்சனை கிளம்பியது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து நாடாளுமன்றம் பக்கமே எட்டிப்பார்க்காத நடிகை ரேகா செவ்வாய்க்கிழமை வந்தார்.
நண்பகல் 12 மணிக்கு வந்த அவர் அவையில் வெறும் அரை மணிநேரம் தான் இருந்தார். பகல் 12.30 மணிக்கு கிளம்பி சென்றுவிட்டார். வழக்கம் போல் பட்டுச் சேலை உடுத்தி ஒரு செம மேக்கப்போட்டு வந்திருந்தார் ரேகா.
ரேகா ராஜ்யசபாவுக்கு கடந்த 2012ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அதில் இருந்து அவர் 7 முறை தான் அவைக்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை வந்ததையும் சேர்த்தால் 8 முறை வந்துள்ளார். அவர் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி தான் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,
ரேகா இதற்கு முன்பும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். அவர் ஒன்றும் தற்போது தான் முதன்முறையாக அவைக்கு வரவில்லை என்றார்.