சபரிமலை ஐயப்பனுக்கும் வாவருக்கும் உள்ள நட்பு... தர்காவில் விபூதி பிரசாதம்
சபரிமலைக்கு செல்லும் வழியில் ஒரு தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவில் விபூதி பிரசாதமாக தரப்படுவது சிறப்பம்சமாகும்.
பட்டனம்திட்டா: சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் அங்குள்ள வாவர் சாமியை தரிசனம் செய்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஐயப்பனின் நண்பராக அருள்பாலிக்கும் வாவர் சாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. மத நல்லணக்கத்திற்கு மிசச்சிறந்த ஒற்றுமையாக சபரிமலை ஐயப்பனை குறிப்பிட்டு சொல்லலாம். பல சமயத்தைச் சேர்ந்த மக்களும் பயபக்தியுடன் கும்பிடும் தெய்வம் ஐயப்பன் தான்.
சபரிமலை ஐயப்பன் தன்னை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் முதலில் வாவர் சுவாமியை தரிசித்து விட்டு அதன் பின்பே தன்னை தரிசிக்க வருவார்கள் என்று வாக்குறுதியளித்தார். அதன்படி தான் அன்று முதல் வாபர் சாமியை வணங்கி தரிசித்துவிட்டு அதன் பின்பே சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க மலையேறிச் செல்கின்றனர்.
சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதியன்று மாலை போட்டு, தினசரி விடியற்காலை மாலை என இரண்டு முறை குளித்து பூஜை செய்து 41 நாட்கள் மிகக் கடுமையாக விரதமிருந்து, இருமுடி கட்டிக்கொண்டு கிளம்புகின்றனர்.
48 மைல் நடந்து செல்லும் பெரிய பாதையில் எருமேலி என்ற இடத்தில் இருக்கிறது வாவர் மசூதி. 48 நாட்கள் விரதமிருந்து செல்பவர்கள் இந்த எருமேலி வழியாகச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
மலையேறும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர், பாரபட்சமில்லாமல் செல்லும் முக்கியமான இடம் வாவர் சன்னதி தான். இதற்கு முக்கிய காரணம் ஐயப்ப சுவாமியும் வாவரும் இணைபிரியா தோழர்கள் ஆவார்கள்.
ஐயப்ப சுவாமி தான் வீற்றிருக்கும் மலையிலேயே வாவருக்கும் ஒரு இடமளித்து, தன்னை தரிசிக்க வருவோர் அனைவரும் வாவர் சாமியை முதலில் தரிசித்துவிட்டு, அதன் பின்பு தன்னை தரிசனம் செய்ய வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவரையும் தன்னுடனேயே சேர்த்துக்கொண்டார் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றனர்.
வாவர் சாமிக்கும் ஐயப்பனுக்குமான தொடர்பு பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன. வாவர் சாமி ஆரம்பத்தில் ஐயப்பனை எதிர்த்து போரிட்டதாகவும் ஆனால் இந்த யுத்தத்தில் தோற்றுப்போன வாவர் ஐயப்பனின் நண்பனாகவே மாறிவிட்டதாகவும் சொல்லப்படுவது அவற்றில் ஒன்றாகும்.
இந்த வாவர் சன்னதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் மத நல்லிணக்க அடையாளமாக திகழ்கிறது. கருங்கல்லால் ஆன வாவர் ஸ்வாமியின் சிற்பத்தை கொண்டுள்ள இந்த சன்னதியில் ஒரு புராதன வாளும் வைக்கப்பட்டுள்ளது. வாவர் சன்னதியில் கறுப்பு மிளகு காணிக்கைப் பொருளாக பக்தர்களால் படைக்கப்படுகிறது. மேலும் இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள வாவர் சுவாமி சன்னதிக்கு சென்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அங்கு சென்று, தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சரியத்தையும் ஒருமனதாகி, முழுமையாக கடைபிடித்தோம் என்று உறுதியளித்து, அதன் பிறகே சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். அதன்படியே பக்தர்கள் அனைவரும் சென்று வருகின்றனர். இந்த பள்ளிவாசலில் விபூதி பிரசாதமாக வழங்குவது சிறப்பாகும்.