ஜெ. உடலை எரிக்காமல் புதைப்பதா? கர்நாடகா காவிரி கரையில் மறு இறுதி சடங்கு செய்த உறவினர்கள்!
ஜெயலலிதாவின் உடலை புதைத்ததற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் அவரது உறவினர்கள் மறு இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.
மாண்டியா: மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சமடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் மறு இறுதிச் சடங்குகள் நடத்தியுள்ளனர்.
ஜெயலலிதா உடலுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் இறுதிச் சடங்குகளை செய்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் இறுதி சடங்குகளை உடனிருந்து செய்தார்.
ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை எரித்திருக்க வேண்டும் என சர்ச்சை வெடித்தது.
தற்போது கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரது உடலை எரிக்காமல் புதைத்ததற்காக அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் இந்து மத ஆச்சாரங்களின்படி ஜெயலலிதாவின் உடலை எரித்திருந்தால்தான் அவரது ஆன்மா மோட்சத்துக்கு செல்லும் என்பதால் மறு இறுதி சடங்குகளையும் அவர்கள் செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வசித்து வரும் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் என்பவர்தான் இந்த மறு இறுதி சடங்குகளை நடத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் மூத்த மனைவி ஜெயம்மாவின் மகன்தான் இந்த வாசுதேவன்.
ஸ்ரீரங்கப்பட்டினம் காவிரி கரையில் ரங்கநாத் அய்யங்கார் என்ற புரோகிதரால் மறு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் உறவினர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.