ஆந்திர போலீசாரின் திட்டமிட்ட படுகொலை... பலியான தமிழர்களின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்!
திருப்பதி: தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட படுகொலை எனக் கூறி, பலியான தொழிலாளர்களின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் திருப்பதி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர வனப்பகுதியில் நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 20 பேரில் 7 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூடு தகவலறிந்து பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் திருவண்ணாமலையில் நேற்று சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலைய முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பின்னர், பலியானவர்களின் உடல்கள் வைக்கப் பட்டிருந்த திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த 7 பேரின் உறவினர்களிடம், வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் உயிரிழந்தவர்கள் உடல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால், உடலை வாங்க மறுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், ‘கூலி வேலைக்குத்தான் அவர்கள் ஆந்திராவுக்கு வந்தனர். அவர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பேருந்தில் வந்த அவர்களை இறக்கி திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அதுவரை உடல்களை பெற மாட்டோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் உறவினர்களைக் கட்டாயப் படுத்தி உடல்களை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.