கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பது திடீர் நிறுத்தம் #Cauvery
பெங்களூர்: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நேற்றுமுன்தினம் இரவு முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் கடந்த 6ம் தேதி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் பாதையில் உள்ள அணைகளில் இருக்கும் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள உச்சநீதிமன்ற, உத்தரவுப்படி மத்திய நிபுணர் குழு கர்நாடகத்திற்கு வந்தது.
அந்தக்குழுவினர் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் பாதையில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்திற்கும் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு முதல் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
கர்நாடகாவில் காவிரி பாசன பகுதிகளான மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் இரு தினங்கள் முன்பு நல்ல மழை பெய்ததால், தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டலு வழியாக ஒகேனக்கல்லுக்கு காவிரியில் அதிக அளவில் நீர் செல்கிறது. இதுவும் அணைகள் மூடப்பட காரணம். சுப்ரீம் கோர்ட் கூறிய கணக்குப்படி தண்ணீரை திறந்துவிட்டதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.