நிர்பயா வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலை; கவலை அளிக்கிறது - உமாபாரதி
டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தண்டனை அனுபவித்த சிறுவனை விடுவிப்பதற்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது கவலை அளிக்கிறது என மத்திய நீர்ளத்துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஜோதிசிங் என்ற மருத்துவ மாணவி மிகக் கொடூரமாக ஆறு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்த அந்தக் கும்பல் ஜோதி சிங்கை கொடூரமாக தாக்கவும் செய்தது. அவரது பிறப்புறுப்பில் இரும்புக் குழாயால் தாக்கியதால் அவரது உடல் உள்ளுறுப்புகள் மோசமாக சேதமடைந்தன. இதன் விளைவாக ஜோதி சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவனான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். 4 கொண்டார். 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இளங்குற்றவாளி ஒருவருக்கு அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இளம் குற்றவாளியின் சிறைத் தண்டனை சட்டப்படி முடிந்து விட்டதால் அவரது விடுதலையை தடுக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறி விட்டது. இதனால் அந்தக் குற்றவாளி திட்டமிட்டபடி நாளை விடுதலை செய்யப்படுகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் உமாபாரதி, பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அனுபவித்த சிறுவனை விடுவிப்பதற்கு தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது மிகப்பெரிய கவலை அளிக்கிறது என கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் எனவும், அந்த சிறுவன் தொடர்ந்து சிறையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி பெண்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.