ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்... ராஜஸ்தானில் கைது
ஜியோ சிம் வாடிக்கையாளர்களின் தகவல்களை இணையத்தில் திருடிய ஹேக்கர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெய்பூர்: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் தனியார் இணையதளத்தில் வெளியானதாக எழுந்த புகாரின் பெயரில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை மஹாராஷ்டிர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்திருக்கும் 12 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்களும் தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாகக் கூறப்பட்டது. வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.
இது குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவி வந்த நிலையில், இதை ஜியோ நிறுவனம் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், தங்களது வாடிக்கையாளர்களின் விபரங்கள் முழு பாதுகாப்போடு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பான புகாரில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை மஹாராஷ்டிரா மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய அந்த இளைஞர் ஹேக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த கணினி மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஆய்வுக்காக சைபர் டீமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சர்வதேச கடத்தல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் அந்த இளைஞருக்கு தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்தியாவையே அதிர வைத்த இந்த ஹேக்கர் விவகாரம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.