ஜியோ வாடிக்கையாளர்கள் முழு விவரமும் லீக்? அதிர்ச்சி தகவல்
மும்பை: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.
ஜியோ வாடிக்கையாளர்களாக மாற வேண்டுமானால் 4ஜி வசதி கொண்ட செல்போன் அவசியம். எனவே இலவசங்களை வாரி வழங்கியபோதிலும், ஜியோ எதிர்பார்த்த அளவுக்கு அதிக வாடிக்கையாளர்களை சென்று சேரவில்லை.
12 கோடி வாடிக்கையாளர்கள்
ஜியோ எதிர்பார்த்த அளவுக்கு வாடிக்கையாளர்களை அடையவில்லை என்றபோதிலும்கூட, அதற்கு குறுகிய காலத்தில் 12 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே குறைந்த விலையில் 4ஜி போன்களையும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது ரிலையன்ஸ். இனிமேல் வாடிக்கையாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விவரங்கள் லீக்
இந்த நிலையில், ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. magicapk.com
என்ற வெப்சைட்டில், வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, செல்போன் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான செய்தி
போன்கள் தொடர்பாக செய்தி வெளியிடும் ஒரு குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு அதன் வாடிக்கையாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார். அவர்கள் சோதித்து பார்த்துவிட்டு, அந்த புகாரில் உண்மையுள்ளதாக கருதி செய்தி வெளியிட்டனர். இப்போது பெரும்பாலான முன்னணி ஊடகங்களும் அச்செய்தியை வெளியிட்டுள்ளன.
ஜியோ மறுப்பு
ஆனால், இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. ஜியோ செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாகவும், தேனையானவற்றிற்கு மட்டுமே டேட்டா பகிரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். வெப்சைட்டில் குறிப்பிட்ட தகவல்களை சோதித்து பார்த்தசதாகவும், அதில் வெளியான கஸ்டமர் தகவலில் உண்மை இல்லை என தெரியவந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், இந்த புகார் பற்றி விசாரணை நடத்திவருவதாகவும் ஜியோ கூறியுள்ளது.