விளம்பரங்களில் மோடி படம்.. எப்ப போட்டதுக்கு எப்ப மன்னிப்பு கேட்குது பாருங்க இந்த பேடிஎம், ஜியோ !
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் பிரதமர் மோடியின் படத்தை தங்களது விளம்பரத்தில் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளனர்.
டெல்லி: பிரதமர் மோடியின் படத்தை அனுமதியின்றி தங்களது நிறுவனங்களின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு தெரிவித்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது இலவச சலுகை விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை பயன்படுத்தியது. இதற்காக மத்திய அரசிடம் எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை. அதேபோல் பேடிஎம் நிறுவனமும் தங்களது விளம்பரத்தில் மோடியின் படத்தை பயன்படுத்தி இருந்தது. இதையடுத்து தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
மேலும் நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சனையை ஏதிர்கட்சிகள் எழுப்பினர். ஏதிர்கட்சியின் கேள்விகளுக்குப் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங், மத்திய அரசின் அனுமதியில்லாமல் மோடியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேடிஎம் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் பிரதமரின் படத்தை பயன்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மோடியின் படத்தை பயன்படுத்தியதற்காக பேடிஎம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மன்னிப்பு தெரிவித்துள்ளன.