4ஜி செல்போன் இருந்தால்போதும்.. 3 மாதங்கள் எல்லாமே ஃப்ரீ.. அசத்தல் ஆஃபருடன் வந்தது ரிலையன்ஸ் ஜியோ!
மும்பை: ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை. இந்த சிம்மை வாங்குவோருக்கு, முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே ஃப்ரீ என்ற அறிவிப்பு, நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.
முதலில் இந்த வகை சிம்கள், ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டது. அவர்கள் உபயோகித்து பார்த்துள்ள நிலையில், இப்போது அடுத்த அடியை எடுத்து வைக்கப்போகிறது ரிலையன்ஸ்.
குறிப்பிட்ட நிறுவன போன்கள்
4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
முன்னோட்ட சலுகை
இதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து 4ஜி போனுக்குமாம்
ஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, ஜியோமி, லெனோவா உள்ளிட்ட 4ஜி வசதி கொண்ட அனைத்து வகை ஸ்மார்ட் போன்களுக்கும் சிம் தரப்பட உள்ளதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எங்கு கிடைக்கும்?
ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், இருப்பிட விவரம், போட்டோ அடங்கிய ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஜெராக்சை சமர்ப்பித்து, உங்கள் 4ஜி வசதி கொண்ட போனையும் காண்பித்து, சிம்கார்டை பெற்று பயன்பெறலாமாம். இருப்பினும், இந்த ஸ்டோர்களில் பணியாற்றுபவர்களுக்கே இன்னும் சரியாக விவரம் சென்று சேரவில்லை என்பதால், அந்த ஸ்டோர்களுக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொண்டு செல்லவும்.
கோபம்
இதனிடையே, பிற டெலிகாம் நிறுவனங்களின் கோபத்தை இந்த ஆஃபர் தூண்டியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது. இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது சேவை தொடக்கத்தை அறிவிக்கவில்லை.