அம்பானிகளை அடக்கி வைக்க வியூகம் வகுக்கும் மோடி அரசு
டெல்லி: காங்கிரஸ் ஆட்சியில் நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொண்டிருந்த அம்பானி சகோதரர்களுக்கு கடிவாளம் போட்டு வைப்பதில் நரேந்திர மோடி மும்முரம் காட்டி வருவதாகவே தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெயரளவில்தான் பிரதமர் மன்மோகன்சிங். ஆனால் ஆட்சியும் அதிகாரமும் செலுத்தியவர்களில் முகேஷ் அம்பானியும் ஒருவர்.
தூக்கியடிக்கப்பட்ட அமைச்சர்கள்
அம்பானி குழுமத்தின் நலன்களுக்கு எதிராக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பெட்ரோலிய அமைச்சர்கள் அடிக்கடி தூக்கி வீசப்பட்ட அவலமும் மன்மோகன்சிங் ஆட்சியில் நிகழ்ந்தது. கோதாவரி-கிருஷ்ணா படுகொலையில் அம்பானி குழுமம் எடுக்கும் இயற்கை எரிவாயுவுக்கு உரிய விலை அதிரடியாக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு பெரும் சர்ச்சையும் வெடித்தது.
பாஜகவும் ஒரே நிலையா?
அதே நேரத்தில் அம்பானி குழுமத்துக்கு குஜராத்தில் முதல்வராக் இருந்த நரேந்திர மோடியும் சலுகை காட்டினார். அம்பானி விஷயத்தில் பாஜகவும் காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டையே மேற்கொள்கின்றன என்று ஆம் ஆத்மி கட்சி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தது.
என்ன செய்வார் மோடி?
லோக்சபா தேர்தலின் போது மோடி ஆட்சிக்கு வந்தால் அம்பானிகள் தொடர்பான நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
அடக்கி வைப்பு
இந்த நிலையில் மத்தியில் மோடி அரசு அமைந்தது முதலே கடந்த அரசைப் போல 'தீர்மானிக்கிற' சக்திகளாக அம்பானிகள் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக செயல்பட்டு வருகிறது.
ஏன் டாலரில்?
அண்மையில் கூட, ரிலையன்ஸ் தோண்டி எடுக்கும் இயற்கை எரிவாயுவுக்கான விலையை ஏன் டாலரில் நிர்ணயிக்க வேண்டும்? இந்திய ரூபாயில் நிர்ணயித்தால் என்று அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
அபராதம்
அதேபோல் இயற்கை எரிவாயு உற்பத்தி குறைவைக் காரணம் காட்டி அம்பானி குழுமத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராத விதிப்பு முந்தைய ஆட்சியிலும் விதிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து நீதிமன்றம் போவதை வாடிக்கையாக வைத்துள்ளது அம்பானி குழுமம்.
ரங்கராஜன் கமிட்டி பரிந்துரை நிராகரிப்பு?
முன்னர் இயற்கை எரிவாயு விலையை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 4.2 டாலர் என்ற விலையில் இருந்து 8 டாலருக்கு ரங்கராஜன் கமிட்டி பரிந்துரைப்படி மத்திய அரசு உயர்த்தியது. ரங்கராஜன் கமிட்டியின் இந்த பரிந்துரையை தற்போது மோடி அரசு நிராகரிக்கவும் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைக்க வேண்டிய இடம்
ஒட்டுமொத்தமாக அம்பானிகளுக்கு ஆமாம் சாமி போடாமல் அவர்களை 'வைக்க' வேண்டிய இடத்தில் வைக்கிறது மோடி அரசு என்கின்றன டெல்லி தகவல்கள்.
சிங்வி நியமனம்
இதனிடையே கேஜி இயற்கை எரிவாயு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தரப்பு நடுவராக மோடி அரசு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சிங்வி நியமிக்கப்பட்டிருக்கிறார்.