2ஜி வழக்கு: டெலிகாம் முன்னாள் செயலர் ஷியாமள் கோஸ் விடுவிப்பு- டெல்லி கோர்ட் அதிரடி!
டெல்லி: கூடுதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் ஷியாமள் கோஸை டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக விடுவித்துள்ளது. இவ்வழக்கில் இருந்து வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளை சி.பி.ஐ. தொடர்ந்துள்ளது. இவ்வழக்குகள் டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 2002ஆம் ஆண்டு ஹட்சன், ஸ்டெர்லிங், பார்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு ரூ846.44 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கும் அடங்கும்.
2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு செயலராக இருந்த ஷியாமல் கோஸ் மற்றும் 3 நிறுவனங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.
இவ்வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த குற்றப்பத்திரிகையை ஏற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்து நீதிபதி ஷைனி முன்னிலையில் இருதரப்பு வாதங்கள் நடைபெற்றன.
இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஷியாமள் கோஸ் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்களை நீதிபதி ஷைனி விடுவித்து உத்தரவிட்டார்.
அப்போது, சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தவறான பொய்யான தகவல்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன; இத்தகைய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த அதிகாரி மீது சி.பி.ஐ. இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் அனைத்துமே வலுவானதாக இல்லை. உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்த வழக்கிலிருந்து தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் சியாமள் கோஷ் விடுவிக்கப்படுகிறார் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி ஷைனி.