தேங்காய் உடைச்சு சாமி கும்பிட்டு விட்டு பூட்டை உடைத்து ஆட்டையைப் போடும் நூதன திருட்டுக் கும்பல்!
மும்பையில் திருட போகும் முன்பு அந்த வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு திருடும் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
மும்பை: தேங்காய் உடைத்துவிட்டு சாமி கும்பிட்டு வீடுகளில் திருடும் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
எந்த தொழிலை செய்தாலும் பக்தியுடன் செய்ய வேண்டும் என்பதும் கடவுளை வணங்கிவிட்டு தொடங்க வேண்டும் என்பதும் தொன்று தொட்டு வரும் நடைமுறையாகும். ஆனால் மும்பையில் வீடு புகுந்து திருடும் கும்பல் திருட்டு தொழிலை சாமியாக பாவித்ததில்லாமல் அதை அந்த கும்பலின் கோட் வேர்டாகவே பயன்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, தாணே, கல்யாண், முலுண்ட், தோம்பிவிலி ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பூஜை நடத்தி திருட்டு
அண்மையில் ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து விசாரணை நடத்த சென்றனர். அப்போது அந்த வீட்டின் வாசலில் தேங்காய் உடைத்து, பூ, மஞ்சள் பை, பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டிருந்தது. இது போல்தான் ஏற்கெனவே ஒரு வீட்டு வாசலில் நடைபெற்றது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பூஜை விவகாரத்தை போலீஸார் தங்களுக்கு கிடைத்த துப்பாகவே நினைத்தனர்.
பூஜை செய்த திருடர்கள்
இதையடுத்து நீண்டநாட்களாக பூட்டியிருந்த ஒரு வீட்டு வாசலில் பூஜை நடத்தப்பட்டிருந்தது. அதுவும் பூக்கள் பிரஷ்ஷாக இருந்தது. இதை ஏற்கெனவே நடந்த சம்பத்துடன் தொடர்புபடுத்தினர். இதனால் போலீஸார் உஷாராக திருடர்கள் செல்வதற்கு முன்பே அங்கு சென்றனர். அப்போது திருட வந்த நிர்மான் ஆர்மோகம் ஷெட்டி (25), சக்திவேல் நிர்மல் (41), பிரவீன் பீம்ராவ் கெய்க்வாட் (25), யஷ்வந்த் பாபன் மோகிதே (20) உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்த அய்யப்பா நாராயண், ரோஹித் சசிகாந்த் ஷேவாலே மற்றும் ஹிமான்ஷூ ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
திருடர்களிடம் இருந்து 4 கத்திகள், இரு ஸ்கூரு டிரைவர்கள்கள், 4 சாவிகள், இரு குல்லாக்கள், தேங்காய், பூக்கள், ஸ்பேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து அந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக் தகவல்கள் கிடைத்தன.
திருடும் கும்பல்
ஒரு கும்பலை சேர்ந்தோ வீதிவீதியாக சென்று நீண்ட நாட்கள் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவர். பின்னர் அந்த வீட்டருகே தேங்காய் உடைத்து பூக்களை தூவி பூஜை செய்துவிட்டு வருவர். இந்த பூஜை அயிட்டங்கள் எந்த வீட்டின் முன்பு இருக்கிறதோ அந்த வீட்டுக்கு மற்றொரு கும்பல் திருட செல்வர். இவ்வாறு நூதன முறையில் திருடும் பணத்தை இரு கும்பலும் பங்கு போட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.