சோனியாவை விமர்சித்த விவகாரம்... மோடியிடம் கதறி அழுகையா? மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் மறுப்பு!!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்தது தொடர்பாக பிரதமர் மோடி கண்டித்ததாகவும் அப்போது கண்ணீர் விட்டு அழுததாகவும் வெளியான தகவல்களை மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் மறுத்துள்ளார்.
மத்திய சிறு, குறு தொழில்துறை இணை அமைச்சரான கிரிராஜ்சிங், அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, நைஜீரிய கருப்பினப் பெண்ணை திருமணம் செய்திருந்தால் அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக காங்கிரசார் ஏற்றுக்கொண்டிருப்பார்களா? சோனியா காந்தி, வெள்ளை நிறத்தவர் என்பதால்தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டனர்' என்று அவர் கூறியிருந்தார்.
கடும் கண்டனம்
கிரிராஜ்சிங்கின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கான நைஜீரிய நாட்டு தூதரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் அமளி
இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பதில் அளிக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.
வருத்தம் தெரிவித்த கிரிராஜ்
அப்போது எழுந்த கிரிராஜ்சிங், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை, எனது கருத்தால் யாராவது காயப்பட்டிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று அவர்கூறினார்.
கண்ணீர் விட்டு அழுகை?
இதனிடையே சோனியா குறித்து கருத்து தெரிவித்த கிரிராஜ்சிங்கிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டதாகவும் அப்போது கிரிராஜ்சிங் கண்ணீர் விட்டு கதறி அழுதார் எனவும் செய்திகள் வெளியாகின.
கிரிராஜ்சிங் மறுப்பு
ஆனால் இதனை கிரிராஜ் சிங் மறுத்து உள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், நான் பிரதமர் மோடியை சந்திக்கவே இல்லை. நான் அழுதேன் என்று யார் கூறினார்? யார் பார்த்தார்? என்றார் கிரிராஜ்சிங்.