எல்லாம் சிரிப்பா இருக்கு.. பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த காங்கிரஸ் எம்.பி.. ராஜ்ய சபாவில் பரபரப்பு
பிரதமர் மோடி நேற்று ராஜ்ய சபாவில் பேசும் போது அவரைக் கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் எம்.பி ஒருவர் சிரித்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி ராஜ்ய சபாவில் அதிக நேரம் பேசினார். இவர் பேசும் போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது குரல் எழுப்பினார்கள்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் ரேணுகா சவுத்திரி மோடியைச் சபையில் கிண்டல் செய்து சிரித்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரேணுகா சவுத்திரி ஏன் அப்படி சிரித்தேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
என்ன பேசினார்
மோடி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிகமாக பேசினார். இவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே ரேணுகா சவுத்திரி சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். அவரது சிரிப்பு சத்தம் அனைத்தையும் தாண்டி கேட்டுக் கொண்டு இருந்தது. இது அவையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சபாநாயகர் கோபம்
இந்த நிலையில் சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு பிரதமர் மோடியைச் சிறிது இடைவெளி விடும்படி கூறினார். பின் ரேணுகாவிடம் ''உடனடியாக சிரிப்பு சத்தத்தை நிறுத்துங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவமனை செல்லுங்கள்'' என்று கோபமாக குறிப்பிட்டார்.
மோடி பதில்
ஆனால் அவர் மீண்டும் மீண்டும் சிரித்தார். உடனே மோடி ''அவர் நன்றாகச் சிரிக்கட்டும். அவரை யாரும் தடுக்காதீர்கள். ராமாயணத்தில் சிலர் இப்படித்தான் சிரித்தார்கள். அதற்குப் பின் இப்போதுதான் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து இருக்கிறேன்'' என்று கிண்டலாக குறிப்பிட்டார். அவர் எந்த ராமாயண கதாப்பாத்திரத்தை குறிப்பிட்டார் என்று சொல்லவில்லை.
ரேணுகா பதில்
இதற்கு ரேணுகா பதில் அளித்துள்ளார். அதில் ''ஆமாம் சிரிக்காமல் என்ன செய்வார்கள். அவர் அப்படித்தான் பேசினார். அப்படிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். இதோ இப்போது நான் பெண் என்றவுடன் எளிதாக என்னை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.