குட் நியூஸ் மக்களே.. ரெப்போ விகிதம் மீண்டும் அதிரடி குறைப்பு.. வட்டி சுமை குறையும்!
டெல்லி: ரெப்போ (repo) விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம்தான் ரெப்போ (repo) விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தது. தற்போது மீண்டும் இதன் விகிதம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக குறைந்தது.
தற்போது மீண்டும் இதில் 25 அடிப்படை புள்ளிகள் ஆர்பிஐ மூலம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது வட்டி விகிதம் 6% ஆக குறைந்துள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு கடன் உள்ளிட்ட சில லோன்களுக்கு 0.25% வட்டி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் வேகத்தடை.. நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?... மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்
ரெப்போ விகிதத்தை குறைக்கும்போது வணிக வங்கிகளுக்கு நிதிப்புழக்கம் அதிகம் ஆகும். வங்கிகள் நிறைய பணம் புழக்கம் இருப்பதால் மக்களுக்கு வட்டி சுமை குறையும். ஆனால் இந்த பணப்புழக்கம் காரணமாக கடுமையான பண வீக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் பொருட்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அதோடு இந்த அதிரடி மாற்றம் காரணமாக இந்தியாவின் ஜிடிபி 7.4%மாக இந்த வருடம் அதிகரிக்கும் என்றும் ஆர்பிஐ கணித்து இருக்கிறது.