நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பற்றி 3 பகுதிகளாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு!
டெல்லி: டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கான இடைத்தரகரான நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவுகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
தனியார் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் இருந்து உரிமங்கள், அனுமதிகள் ஆகியவற்றைப் பெற்றுத் தருவது, தொழில் மேம்பாடு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட சேவைகளை நீரா ராடியாவின் நிறுவனமான வைஷ்ணவி கன்ஸல்டன்ஸி வழங்கிவந்தது. அவரது வாடிக்கையாளர்களாக டாடா குழுமம் உள்ளிட்ட பெரிய தொழில் நிறுவனங்கள் இருந்தன.
இந் நிலையில், குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு ஒன்பது ஆண்டுகளில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் குவிந்தன. இதனால், அவரது செயல்பாடு மீது வருமான வரித் துறைக்கு சந்தேகம் எழுந்தது.
இதை தொடர்ந்து நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை வருமான வரித் துறை ஓட்டுக் கேட்டது. 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 முதல் 60 நாட்கள், அக்டோபர் 19 முதல் 60 நாட்கள், 2011-ஆம் ஆண்டு மே 11 முதல் 60 நாட்கள் என மொத்தம் 180 நாள்கள் அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன.
அவற்றில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் கோருதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
ஆ. ராசா, கனிமொழி, காங்கிரஸ் தலைவர்கள், ரத்தன் டாடா உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் நீரா ராடியா பேசியது தெரிய வந்தது.
இந் நிலையில், நீரா ராடியாவின் இதர உரையாடல் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த ரத்தன் டாடா, நீரா ராடியா விவகாரம் தொடர்புடைய பேச்சுகளை வெளியிடக் கூடாது. அவருடன் நானும் பேசியுள்ளேன். ஆகவே, அந்த உரையாடல்களை வெளியிடுவது எனது தனி நபர் உரிமையை மீறுவதாக அமையும். எனவே, ராடியாவின் உரையாடல் பதிவுகளை வெளியிடக் கூடாது என்று தனது மனுவில் கோரியுள்ளார்.
எந்தெந்த அடிப்படையில் விசாரணை?
இது தொடர்பாக, டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் எச்.எல். தட்டூ, ஜே.எஸ். கேஹர், ஆர்.கே. அகர்வால் அடங்கிய மூன்று பேர் பெஞ்ச் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து நீதிபதி தட்டூ, 'இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப நிபுணர் குழு சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகளை தனித் தனியாகத் தொகுத்துள்ளது. அதன் அறிக்கை சீல் வைக்கப்பட்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை நீதிமன்றம் உத்தரவிடும் வரை சிபிஐ திறக்கக் கூடாது.
நீரா ராடியா தொலைபேசி விவகாரத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறோம். அதன்படி, தனி நபர் அந்தரங்கப் பாதுகாப்பு, தனி நபருக்கும்-அரசுக்கும் இடையில் உள்ள தொடர்புகளும் சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவது தொடர்பானவையும் விசாரிக்கப்படும்.
சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகளில் எவற்றை ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளியிடலாம் என்பது தனியாக ஆராயப்படும். தனி நபர் உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இந்த விஷயத்தை நீதிமன்றம் ஆராயாது.
வரும் ஆகஸ்ட் 26 முதல் 28 வரை தனி நபர் அந்தரங்கம் தொடர்பான பேச்சுகள் பிரிவில் எந்தெந்த உரையாடல்கள் சேர்க்கப்படலாம் என்பது குறித்து முதலில் விசாரிக்கப்படும். எந்தச் சூழ்நிலையிலும் இத் தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்துவிடாமல் சிபிஐ பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தட்டூ குறிப்பிட்டார்.
அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எல். நாகேஸ்வர ராவ், நீரா ராடியா தொலைபேசி ஒட்டுக் கேட்புப் பதிவுகள் சிபிஐ மூலம் வெளியே கசியவில்லை. தனி நபர் அந்தரங்கப் பாதுகாப்பு விஷயத்தில் வரம்பு மீறக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரத்தன் டாடா மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.