வெமுலாவின் தாயார்.. அடித்து கொல்லப்பட்ட ஜூனைத் அம்மா.. 3 பாட்டிகள்.. டெல்லியில் அசத்தல் கொடியேற்றம்!
டெல்லி: உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வீடியோவைப் பார்க்கும்போது. கடுமையான விமர்சனத்துக்குள்ளான ஒரு இடத்திலிருந்து இப்படி ஒரு உணர்ச்சிகரமான காட்சியை இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் பார்க்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
டெல்லியின் ஷாஹீன்பாக் பகுதியில் தான் இந்த அருமையான கண்கொள்ளாக் காட்சி நடந்தேறியது. சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து இங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதி இது... இந்தப் பகுதியை பாஜக உள்ளிட்ட கட்சிகள் குட்டி பாகிஸ்தான் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் தங்களது தேச பக்தி எத்தகையது என்பதை இன்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் நிரூபித்து இந்தியாவேயே நெகிழ வைத்து விட்டனர்.
சிஏஏ உள்ளிட்ட மத்திய அரசின் சமீபத்திய குடியுரிமை சட்டத் திருத்தங்களை எதிர்த்து ஷாஹீன்பாக்கில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் இங்கு குழுமி போராடிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதுவும் எப்படி தெரியுமா.. மக்கள் கடலுக்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி அசத்தி விட்டனர்.
முதன்முறையாக பள்ளி வாசல்களில் தேசிய கொடி.. அனைவரும் இந்தியர்கள்.. உறுதிமொழியேற்ற இஸ்லாமியர்கள்!
தேசியக் கொடியை ஏற்றியவர்கள் யார் என்பதுதான் இங்கு விசேஷமானது.. தெலுங்கானாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கு சர்ச்சைக்கிடமான முறையில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா, மதுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் மத வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்ட டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஜூனைத் கான் மற்றும் ஷாஹீன்பாக் பகுதியைச் சேர்ந்த சில பாட்டிமார்கள் இணைந்து இந்த தேசியக் கொடியை ஏற்றினர்.
Rohit Vemula's mother Radhika Vemula, Junaid's mother and the Dadis (grndmothers) of #ShaheenBagh hoisted the national flag at the protest venue.
— Ravi Nair (@t_d_h_nair) January 26, 2020
See the sea of people cheering..
Video: @zafarabbaszaidi pic.twitter.com/D9w9eKZufj
யாருடைய தேச பக்திக்கும் குறைந்ததில்லை எங்களது தேச பக்தி என்பதையே இந்த தேசியக் கொடி ஏற்றும் வைபவம் நிரூபித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக் கொடி ஏற்றியபோது கைகளைத் தட்டியும், சல்யூட் செய்தும் குடியரசு தின கொண்டாட்டத்தை மேலும் பொலிவூட்டினர்.
ஷாஹீன்பாக் பகுதியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் கூடி தேசிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் தொய்வே இல்லாமல் தொடர்ந்து கொண்டுள்ளது. இன்று போராட்டத்தில் ஈடுபட்டோர் குடியரசு தினத்தை மிகவும் வித்தியாசமாக கொண்டாடி நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து விட்டனர்.