டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 2ம் இடம்!
டெல்லி: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு சிறந்த பங்களிப்பைத் தந்தமைக்கான பரிசைப் பெற்றுள்ளது.
கடந்த ஞாயிறன்று இந்தியாவின் 65வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தலைநகர் டெல்லியில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இந்திய மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில், சிறப்பான பங்களிப்பினை தந்தமைக்காக மேற்கு வங்காளத்தை சேர்ந்த அலங்கார வண்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார வண்டி 2வது இடமும், அசாமைச் சேர்ந்த வண்டி 3-வது இடமும் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அலங்கார வண்டி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டத்தை சித்தரிப்பதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கான பரிசளிப்பு விழா வரும் 31ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.