ரிபப்ளிக் ஜன்கி பாத் எக்ஸிட் போல்.. மேற்கு வங்கத்தில் டஃப் கொடுக்கும் பாஜக.. பரிதாப காங்.
கொல்கத்தா: நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், எக்ஸிட் போல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பு நிலவும் மேற்குவங்க மாநிலத்தில், பாஜக தான் அதிக இடங்களை பெறும் என ரிபப்ளிக் ஜன்கி பாத் எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாரதிய ஜனதாவிற்கும் அங்கு கடும் போட்டி நிலவிவருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இரு கட்சியினரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் உச்சகட்டமாக கடந்த வாரம் அமித்ஷா பங்கேற்ற பேரணியின் போது, கொல்கத்தாவில் பெரும் வன்முறை வெடித்தது. பாஜக-வினர் மம்தா கட்சி மீதும், அவர்கள் பாஜகவினர் மீதும் சரமாாரியாக குற்றம்சாட்டி கொண்டனர். இறுதியில் பொது சொத்துகளும், சமூக சீர்திருத்தவாதி சிலை ஒன்றும் உடைப்பட்டது தான் மிச்சம்.
இவர்களின் கலவரத்தை பார்த்து அரண்ட தேர்தல் ஆணையம், அம்மாநிலத்தில் மட்டும் ஒருநாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடிக்க உத்தரவிட்டது தனி கதை.
இவ்வளவு களபேரங்களுக்கு மத்தியில், அம்மாநிலத்தில் நீயா நானா பார்த்து விடலாம் என்று குடுமிபிடி சண்டை போடாத குறையாக இரு கட்சிகளும் தேர்தலின் போது தீயாக வேலை பார்த்தன.
தற்போது ரிபப்ளிக் ஜன்கி பாத் மேற்குவங்க மக்களவை தேர்தல் எக்ஸிட் போல் முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத்தை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு குறைந்தபட்சமாக 13 இடங்களும் அதிகபட்சமாக 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக அணி 38- 42 இடங்களை கைப்பற்றும்... இந்தியா டுடே கணிப்பு
பாரதிய ஜனதாவிற்கு குறைந்தபட்சமாக 18 இடங்களும் அதிகபட்சமாக 26 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் காங்கிரஸின் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது. அக்கட்சிக்கு அதிகபட்சம் 3 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும் மேற்குவங்கத்தில் பறக்க போவது தீதியின் கொடியா அல்லது பாஜகவின் கொடியா என்று..