பத்மாவதி.. பார்ர்ரா.. பாஜகவுக்கு கண்டனமெல்லாம் தெரிவிக்கிறார் அர்னாப்!
பத்மாவதி திரைப்படத்திற்கு ஆதரவளித்துள்ளார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி
Recommended Video
டெல்லி : ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, 'பத்மாவதி' படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்திலும் சரியானது அல்ல என்று தெரிவித்து இருக்கிறார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து விலகி, ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், விவாதங்களை தொகுத்து வழங்குபவராகவும் பணிபுரிந்து வருகிறார் அர்னாப். அந்த தொலைக்காட்சி பா.ஜ.க.,விற்கு ஆதரவான செய்திகளை வழங்கிவருகிறது.
தீபிகாவிற்கு கொலைமிரட்டல்
சஞ்சய்லீலா பன்சாலியின் இயக்கத்தில், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்மாவதி திரைப்படத்தில் ராஜ்புத் வம்சத்தினரைப் பற்றி தவறான முறையில் படமாக்கப்பட்டுள்ளதால் அதை தடை செய்யக்கோரியும், படம் வெளியானால் தீபிகா, பன்சாலியை கொலை செய்வோம் என்றும் பல்வேறு அமைப்புகள் மிரட்டி வருகின்றன.
பல இடங்களில் போராட்டம்
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வரும் இந்த படத்தை தடை செய்து மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத் மாநில முதல்வர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பீஹார், ஹரியானா மாநிலங்களில் பா.ஜ.க ஆதரவு அமைப்புகள் வன்முறையில் இறங்கியுள்ளன. இதனால் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிறப்பான திரைப்படம்
இந்நிலையில், ரிபப்ளிக் டி.வி விவாதத்தில் பேசிய அர்னாப், தான் பத்மாவதி திரைப்படத்தை பார்த்துவிட்டதாகவும் அதில் எந்த ஒரு தவறான காட்சியும், கருத்தும் இல்லை என்றும், இதை விட ராஜ்புத் வம்சத்தினரைப் பற்றி சிறப்பான முறையில் படமெடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், காதல் காட்சிகள் கூட கண்ணியமாய் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்மாவதிக்கு ஏன் எதிர்ப்பு ?
இந்தப்படம் ராணி பத்மாவதிக்கு மேலும் புகழைத்தான் தேடித் தரும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கார்னி சேனா போன்ற அமைப்புகள் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும். தேவை இல்லாத அரசியல் காரணங்களுக்காக இந்தப்படம் எதிர்க்கப்படுவதை மக்கள் விரைவில் உணர்வார்கள். எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பா.ஜ.க தலைவர்கள் இந்த போராட்டங்களை தூண்டி விடாமல் இருப்பது நல்லது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
என்ன ஆச்சு அர்னாப்பிற்கு ?
எப்போதும் பா.ஜ.க.,விற்கு ஆதரவாக பேசும் அர்னாப் கோஸ்வாமியின் இந்தப் பேச்சு பா.ஜ.க தலைவர்களிடம் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.