குஜராத்தில் 108 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும்... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு!
குஜராத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video
மும்பை : குஜராத் சட்டசபையில் 108 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவியின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், 182 உறுப்பினர்கள் உள்ள சட்டசபைக்கு, முதல் கட்டமாக டிசம்பர் 9ல், 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 68 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி கட்டமாக, 93 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்றும் 60 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் குஜராத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கப் போகிறது என்று ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் நடத்தியுள்ளது.
பாஜக 108 இடங்களில் வெல்லும்
இதில் குஜராத்தில் பாஜக 108 இடங்களை வென்று ஆட்சியமைக்கும் என்றும் காங்கிரஸ் 74 இடங்களில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. குஜராத்தில் பாஜக ஆட்சியமைத்தாலும் 2012 தேர்தலை ஒப்பிடும் போது 2017 தேர்தலில் அந்த கட்சியின் வாக்கு வங்கியானது 47.8 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக குறைந்துள்ளது.
7 இடங்களில் பின்னடைவு
2012ல் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இது பாஜகவிற்கு பின்னடைவான விஷயம் தான்.
கூடுதலாக 10 இடங்கள்
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கப் போகும் ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட கூடுதலாக 10 இடங்களில் வெல்லும் என்று கருத்துக்கணிப்பு கூறுகின்றன. 2012ல் 38.8 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 18ல் இறுதி முடிவு
2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலை தற்போது 74 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக எக்ஸிட் போல கூறுகிறது. எனவே வளர்ச்சி, குடும்ப அரசியலுக்கான குஜராத் சட்டசபை தேர்தலில் வளர்ச்சி சற்று பின்வாங்கியுள்ளது என்பதைத் தான் மக்களின் முடிவுகள் கூறுவதாக அமைந்துள்ளது. எனினும் இறுதி முடிவு டிசம்பர் 18ல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போதே தெரிய வரும்.