5ஆம் நாளாக தொடரும் மீட்புப் பணிகள்... பக்கவாட்டில் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி
டோராடூன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஐந்தாம் நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று பனிப்பாறை ஒன்று வெடித்தது. இதன் காரணமாக தவுலி கங்கா நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தவுலி கங்காவில் கட்டப்பட்டுவந்த தபோவன் நீர்மின் நிலையம் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கில் இதுவரை உயிரிழந்த நிலையில் 35 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இந்தோ திபத் போலீஸ் படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் தொழிலாளர்கள்
இந்த வெள்ளத்தால் தபோவன் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 35 பேர் உள்ளே சிக்கிக் கொண்டர். அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகள் ஐந்தாம் நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் காரணமாகச் சுரங்கத்தின் முகப்பில் பாறைகளும் சேறுகளும் சேர்ந்துள்ளன. அவற்றை நீக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
துளையிடும் பணிகள்
இந்த சுரங்கத்தின் அருகில் பல சிறிய சுரங்கங்களும் அமைந்துள்ளன. இந்நிலையில், அந்த சிறிய சுரங்கங்களிலிருந்து பெரிய சுரங்கத்திற்குத் துளையிடும் பணிகள் இன்று அதிகாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறிய சுரங்கத்திலிருந்து சுமார் 15 மீட்டர் துளையிட்டால் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பெரிய சுரங்கத்தை அடையமுடியும் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோ திபத் போலீஸ் படை
இதன் மூலம் சுரங்கத்தில் சேறு மற்றும் கற்கள் உள்ள பகுதியைத் தாண்டி செல்ல முடியும் என்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் இந்தோ திபத் போலீஸ் படை தெரிவித்துள்ளது. துளையிடும் பணிகள் இன்று காலை 2 மணிக்கு தொடங்கப்பட்டதாகவும், தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கத்தை அடைந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்தோ திபத் காவல் படை தெரிவித்துள்ளது.
உறவினர்கள் புகார்
இருப்பினும், மீட்புப் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருவதாகச் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வெறும் ஒரே ஒரு புல்டோசரை மட்டுமே பயன்படுத்தி மீட்புப் பணிகளை நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள உறவினர்கள், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.