விபத்தில் சிக்கி நொறுங்கி கிடக்கும் ஏ.என்.32 விமானம்.. கடினமான மலையில் களமிறங்கிய மீட்புக் குழு
இடாநகர்: கடந்த 10 நாட்களுக்கு முன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் சிதறியுள்ள கடினமான மலைபகுதியில், விமானப்படை குழு ஒன்றை களமிறக்கியுள்ளது.
சுமார் 8 முதல் 10 பேர் கொண்ட இக்குழுவானது, விமான பாகங்களின் சிதறல்களுக்கிடையே யாரேனும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்களா என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாம் மாநிலம் ஜோர்காட் விமான தளத்திலிருந்து கடந்த ஜூன் 3 அன்று 13 பேருடன் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு புறப்பட்டு சென்றது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. மோசமான வானிலையால் மாயமான விமானத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விமானப்படைக்கு சொந்தமான அதிநவீன விமானங்கள் உதவியுடன், மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது.
ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக, அருணாச்சல பிரதேசத்திலுள்ள லிபோ என்ற பகுதிக்கு வடக்கே, உடைந்த விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டன. மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட எம்.17 ரக ஹெலிகாப்டரில் சென்ற விமானப் படை வீரர்கள், உடைந்து நொறுங்கிய விமான பாகங்களை கண்டுபிடித்தனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது
இப்புகைப்படம் ஹெலிகாப்டரில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. விமான பாகங்கள் சிதறி கிடக்கும் பகுதியானது அடர்ந்த வனம் மற்றும் கடினமான மலை பகுதியை உள்ளடக்கியது என்பதால், மீட்பு ஹெலிகாப்டர்களை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டது
இந்நிலையில் மீட்பு ஹெலிகாப்டர்களின் உதவியுடன் விமான பாகங்கள் சிதறி கிடக்கும் மிகவும் ஆபத்தான பகுதியில், சுமார் 10 பேர் கொண்ட குழு இறக்கி விடப்பட்டுள்ளது. அவர்கள் கூறும் தகவல்களை வைத்தே உடைந்த விமான பாகங்கள் ஏ.என்.32 ரக சரக்கு விமான பாகங்கள் தானா, அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் பயணித்த 13 பேரில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியவரும்.