ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மும்பை இளைஞர்கள் - மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம்
மும்பை: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மும்பை புறநகரைச் சேர்ந்த நான்கு இளைஞர்களில், இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப் மஜீத் தாயகம் திரும்பி விட்ட நிலையில், மீதமுள்ளவர்களும் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஆரிப் மஜீத், ஷாகீன் தன்கி, பகத் ஷேக் மற்றும் அமான் ஆகிய 4 இளைஞர்கள் கடந்த மே மாதம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புனித தலங்களை தரிசிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் நால்வரும் மீண்டும் நாடு திரும்பவில்லை.
மாயமான நான்கு இளைஞர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டதாகக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் 26-ந் தேதி மாயமான மாணவர்களில் ஒருவரான ஆர்ப் மஜீத் வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தானே, கல்யாண், நவிமும்பை பகுதிகளை சேர்ந்த பலரிடம் தீவிரவாத தடுப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ரகுமான் தவுலாதி மற்றும் அகமது ரத்தேப் ஆகியோர் சம்பந்தப்பட்ட 4 மாணவர்களையும் மூளைச்சலவை செய்து அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு கொள்ள வைத்தது தெரியவந்தது. மேலும், ஆதில் தோலரே என்ற பழ வியாபாரிக்கும் இதில் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் உள்ள அந்த நான்கு பேரும் தற்போது நாடு திரும்ப விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த போதும், தொடர்ந்து அந்த இளைஞர்கள் நான்கு பேரும் தங்களது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாகவும், நான்கு இளைஞர்களில் ஒருவரின் தந்தை மூலமாக அவர்கள் நாடு திரும்பும் விருப்பம் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தெரியப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஆரிப் மஜித் உயிரோடு நாடு திரும்பியுள்ளதாகவும், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப் பட்டு வருவதாகவும் தேசிய புலனாய்வு அமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.