முன்பதிவு 'சாட்' இனி ரயில் பெட்டிகளில் ஒட்டமாட்டார்கள்.. பயணிகள் திண்டாட்டம்
டெல்லி: மார்ச் 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்களில் பயணிகளுக்கான முன்பதிவு இருக்கை, படுக்கை குறித்த பட்டியல் ஒட்டப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 1ம் தேதி முதல் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஏ1, ஏ மற்றும் பி வகை கிரேடு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு குறித்த அறிவிப்பு லிஸ்ட் அடுத்த 6 மாதங்களுக்கு ரயில் பெட்டிகளில் ஒட்டப்படாது என கடந்த 13ம் தேதி ரயில்வே துறைக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்.
எனவே, மெயில், எக்ஸ்பிரஸ், சதாப்தி, ஹம்சபர், துரந்தோ, ராஜ்தானி, கரீப் ராத் ஆகிய ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாமல் இயக்கப்பட உள்ளது. இதற்கு பதிலாக சீட் ஒதுக்கீடு பற்றிய தகவல் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வடிவில் அனுப்பப்படும்.
காகித பயன்பாட்டை குறைத்து இயற்கையை பேணுவது மற்றும் காகித பயன்பாட்டால் ஆகும் செலவீனங்களை மிச்சப்படுத்த இந்த நடைமுறையை ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏ1 ரயில் நிலையங்கள் பட்டியலின்கீழ், சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, மதுரை ஆகியவை வருகின்றன. இந்த திட்டத்தில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது. ஐஆர்சிடிசி வெப்சைட், மொபைல் ஆப்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இதுபோல, எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு குறித்த அறிவிப்பு விவரம் வரும்.
ஆனால், ரயில் நிலையங்களில் சென்று நேரடியாக முன்பதிவு செய்பவர்களுக்கு சிஎன்எப் குறியீடு மட்டுமே அனுப்பப்படுகிறது என்பதால் படுக்கை எண், ரயில் பெட்டி எண் போன்றவை அனுப்பப்படாது. இதனால், டிக்கெட் பரிசோதகரிடம்தான் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் பரிசோதகரிடம் கேட்டு அறிய காலதாமதம் ஏற்படும். மேலும், டிக்கெட் பரிசோதகருக்கு பணி பழு அதிகரிக்கும்.
மேலும், பெரும்பாலான, மூத்த குடிமக்களுக்கு இன்னும் மொபைல் போன் இயக்குவதிலும், எஸ்எம்எஸ், பார்ப்பதிலும் பழக்கம் இல்லை. அவர்கள் எப்படி தங்கள் இருக்கைகளை கண்டறிவார்கள் என்பது நடைமுறையில் இருக்கும் பெரிய சிக்கலாகும்.