தனியார் துறையிலும் இடஒதுக்கீடு.. மத்திய அரசு பரிசீலனை: ராம்விலாஸ் பஸ்வான்
மும்பை: தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பஸ்வான், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தற்போது நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மாற்றத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொள்ளாது என்று தெரிவித்தார்.
அப்போது, இடஒதுக்கீட்டு கொள்கை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவிகித இடங்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும் பஸ்வான் தெரிவித்தார்.
முன்பு ஒரு முறை அவர் அளித்த பேட்டியில், அரசு சலுகைகளால் பயன்பெறும் தனியார் நிறுவனங்கள், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
நாட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தோரின் மக்கள் தொகைக்கேற்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.