ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக அம்மாநில மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35-ஏ ஆகியவை அரசியல் சாசன சட்டப்பிரிவுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. இதற்கு அப்போது அம்மாநில அரசியல் கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது ஜம்மு காஷ்மீரில் முதலீட்டாளர்களும், பிற மாநிலத்தை சேர்ந்த மக்களும் நிலம் வாங்கலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக காஷ்மீர் நிலங்கள் மீதான காஷ்மீர் மக்களின் ஏகபோக உரிமை முடிவுக்கு வந்துள்ளது.
புதிய சட்டம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிச் சட்டத்தின் படி ‘மாநிலத்தின் நிரந்தர குடிமக்களாக இருக்க வேண்டும்' என்ற நிபந்தனை ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் இனி ஜம்மு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று மாறி உள்ளது.
கலெக்டர் அனுமதி தேவை
எனினும் வேளாண் நிலத்தை வேளாண்மை அல்லாத பயன்களுக்கு பயன்படுத்த தடை உள்ளது. மாவட்ட கலெக்டரிடமிருந்து அனுமதி இல்லாமல் இதை மாற்ற முடியாது. சுகாதாரம் மற்றும் கல்விக்காக எந்த நிலத்தையும் எந்த ஒரு நபருக்கும் விற்க முடியும். கார்ப்ஸ் கமாண்டர் மட்ட பதவியில் உள்ள ராணுவ உயரதிகாரி ஆயுதப்படைகளின் பயிற்சிக்காக, பயனுக்காக எந்த ஒரு இடத்தையும் 'ராணுவப் பகுதியாக' அறிவித்து இணைக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெஹ்பூபா முப்தி
இந்த சட்டத்திற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் இன்னொரு கள்ளத்திட்டம் என மெஹ்பூபா முப்தி கூறினார். இந்த சட்டத்திற்கு ஒமர் அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெருவில் இறங்கி போராட்டம்
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று அங்குள்ள கட்சிகள் அழைப்பு விடுத்த நிலையில், தெருவில் இறங்கி பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் தனியான நிலச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது..