லக்விக்கு ஜாமீன் வழங்குவதா?- பாகிஸ்தானை கண்டித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றம்!!
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஷகி உர் லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்ததைக் கண்டித்து லோக்சபாவில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான லக்விக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதற்கு இந்தியா தனது கவலையை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று லோக்சபாவின் பாகிஸ்தானின் செயலை கண்டித்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தீர்மான நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் நடந்து வரும் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் நடவடிக்கையிலும் இந்தியா தனது அழுத்தத்தை அளிக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடப்போவதாக பாகிஸ்தான் அரசு கூறும் நிலையில் தீவிரவாதி லக்விக்கு அந்நாட்டு நீதிமன்றம் எதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. இதிலிருந்து பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை அனைத்தும் பெயரளவில் தான் என்று தெரிகிறது.
தீவிரவாதி லக்விக்கு எதிரான குற்றம் நிரூபிக்க முடியவில்லை, அவருக்கு எதிராக தக்க ஆதாரம் இல்லை என்று தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனடியாக தீவிரவாதி லக்விக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றார்.