பாஜக தலைமையிலான தே.ஜ.கூவில் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது- மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறது
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைந்துள்ளது.
பாட்னா: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைந்துள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சரவையிலும் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள செயற்குழுவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணணவது என நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இதற்கு சரத் யாதவ் தலைமையிலான ஜனதா தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பீகாரில் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடனான மெகா கூட்டணி தொடரும் என அறிவித்திருக்கிறது. மேலும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் செயற்குழு கூட்டத்திலும் சரத் யாதவ் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தியாகி, ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு என்பது எதுவும் இல்லை. அனைத்து எம்.எல்.ஏக்களும் எம்.எல்.சிக்களும் கட்சி நிர்வாகிகளும் நிதிஷ்குமாருடனே உள்ளனர். அதனால் பிளவு என்கிற பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.