ரிசார்ட் அரசியல்... பிள்ளையார் சுழி போட்ட கர்நாடகா.. கர்நாடகாதான் சிறந்த இடமும் கூட!
கட்சி எம்எல்ஏக்கள் விலைபோவதை தடுக்க ரிசார்ட்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த ரிசார்ட் அரசியல் கர்நாடகாவில்தான் துவங்கியது. தங்குவதற்கு கர்நாடகதான் சிறந்த இடமாகவும் உள்ளது.
பெங்களூர்: குதிரை பேரத்தை தவிர்ப்பதற்காக கட்சியின் எம்எல்ஏக்களை ரிசார்ட்களுக்கு அழைத்துச் செல்லும் அரசியல் கர்நாடகாவில்தான் துவங்கியது. அதேபோல் எம்எல்ஏக்களை தங்க வைக்க கர்நாடகாதான் கட்சிகளின் முதல் சாய்ஸாக உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து, யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. குதிரை பேரத்தை தவிர்க்க பெங்களூரில் உள்ள ஈகின்டன் ரிசார்டுக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் ரிசார்ட் அரசியல் என்பது புதிதல்ல. இதற்கு முன் பல முறை இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. முதல் முறையாக கர்நாடகாவில்தான் இந்த அரசியல் அறிமுகமானது. அதேபோல், எம்எல்ஏக்களை அழைத்து செல்வதற்கு பல்வேறு கட்சிகளின் முதல் விருப்பமாக கர்நாடகா உள்ளது.
முதன் முதலில் கர்நாடகாவில் 1983ல் ரிசார்ட் அரசியல் அறிமுகமானது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் வளைத்துவிடக் கூடாது என, ஜனதா கட்சியின் முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டே, கட்சி எம்எல்ஏக்களை கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்தார்.
1984ல் ஆந்திரா முதல்வர் என்டி ராமாராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். அவர் திரும்பி வந்தபோது, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிடப்பட்டது. அப்போது சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் உள்ள ரிசார்ட், ஹோட்டல்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்க வைக்கப்பட்டனர். 1985ல் கட்சியில் தெலுங்கு தேசம் கட்சியில் ஏற்பட்ட மோதலில் சந்திரபாபு நாயுடு அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்தார். அப்போது தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் என்டி ரமாராவ் தங்க வைத்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
2002ல் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் என, 71 எம்எல்ஏக்களை மைசூருக்கு அனுப்பி வைத்தார் காங்கிரஸ் முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக்.
சொந்தக் கட்சியிலேயே நடந்தது
2011ல் ஊழல் புகாரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் எடியூரப்பா பதவி விலக நேரிட்டது. அப்போது தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வராக்குவதற்காக, 60 ஆதரவு எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அருகில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்க வைத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, சதானந்தா கவுடாவுக்கு பதிலாக, மீண்டும் தன்னை முதல்வராக்க வலியுறுத்தி, இதே ரிசார்ட் அரசியலில் எடியூரப்பா ஈடுபட்டார்.
கூவத்தூர் தான் பேமஸ்
ஆனால் இந்த ரிசார்ட் அரசியலை சமீபத்தில் உலகெங்கும் பேச வைத்தது அதிமுகதான். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். சிலர் அங்கிருந்து தப்பியது என பல நாடகங்கள் நடந்து, உலகெங்கும் பேச வைத்தது. அதன்பிறகு, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடகாவின் குடகுக்கு சென்றனர்.
பாவம் காங்கிரஸ் கட்சி
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரான அஹமது படேல் வெற்றி பெறுவதற்காக, 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பெங்களூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.