பணத்தை மதிங்க… அதை வச்சு பந்தல் போடதீங்க! ரிசர்வ் வங்கி அறிவுரை
டெல்லி: இந்திய ரூபாய் நோட்டுக்களை நான்காக, எட்டாக மதிப்பதில் தொடங்கி பந்தல் போடுவது வரை இன்றைக்கு பயன்படுத்துகின்றனர். பணத்தை மதிக்காமல் இருப்பவர்கள்தான் இவ்வாறு மாலையாகவோ, பந்தல் போடவோ பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிவிப்பதோ, பந்தல் போடுவதோ வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
நம் நாட்டின் அடையாளம் ரூபாய் நோட்டுக்கள்தான். முன்பெல்லாம் பணத்தை சாமியாக நினைத்து கும்பிட்டனர்.
ஆனால் இன்றைக்கு எளிதாக பணத்தை ஈட்டலாம் என்ற மனபோக்கு மக்கள் மத்தியில் வளர்ந்து விட்டதால் பணத்தின் மீது இருந்த தனிமரியாதை தற்போது பறிபோய் விட்டது. ரூபாய் நோட்டுக்களை யாரும் மதிப்பதே கிடையாது...
கரன்சி மாலை
பலரும் பணத்தில் கிறுக்கி வைக்கின்றனர். சிலர், கவிதையோ, ஏன் குட்டி காதல் கதையோ கூட எழுதி வைக்கின்றனர். அரசியல் தலைவர்கள் கூட்டம் என்றால் தற்போது தவறாமல் இடம்பெறுவது கரன்சி மாலை... அதை விட ஒருபடி மேலே போய் பணத்தில் கிரீடம் கூட சூட்டுகின்றனர். ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தயாரிக்கப்பட்ட நோட்டு மாலை இப்போது 100, 500, 1000 என தயாரிக்கும் அளவுக்கு முன்னேரியுள்ளது.
கோவில்களில் அலங்காரம்
இது போதாதென்று இந்தியாவில் பல்வேறு கோயில்களில் சாமிகளையும், மூலஸ்த்தானத்தையும் ரூபாய் நோட்டுகளைகொண்டு அலங்காரங்கள் செய்து பூஜை நடந்திக்கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு அகல பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கும் இந்த வேளையில் பணத்திற்கு மதிப்பு கொடுங்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாலை, பந்தல் வேண்டாமே
இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, பந்தல்களை அலங்கரிக்கவும், சுவாமி சிலைகளுக்கு மாலையாக அணிவிக்கவும் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
பணத்தை எறியவேண்டாம்
மேலும் கலை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களில் ரூபாய் தாள்களை வீசி எறிய வேண்டாம் எனவும் அறிவுறுத்திய ரிசர்வ் வங்கி, அவ்வாறு பயன்படுத்தினால் ரூபாய் தாள்கள் சேதமடைந்து அதன் ஆயுள்காலம் குறையும் என தெரிவித்துளது.
முறையான சட்டமில்லை
ரூபாய் தாள்களை தவறாகப் பயன்படுத்தாமல் அதனை மதிக்க வேண்டும் என நாட்டு மக்களை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை பாதுகாக்க ரிசர்வ் வங்கி அறிவறுத்தினாலும், இதுதொடர்பான தவறுகளைத் தடுக்க நம் நாட்டில் முறையான சட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.