பாகிஸ்தானின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது… இந்திய ராணுவம் தகவல்
ராஜஸ்தான்: பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் என்ற இடத்தில் பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடந்த 26ஆம் தேதி இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது முகாம்கள் அழிக்கப்பட்டது என்றும் அதில், பல தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
பாகிஸ்தானை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குஜராத் எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஏற்கனவே கடந்த 27ஆம் தேதி காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் எப்16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அண்மையில் ராஜஸ்தானின் எல்லைப் பகுதியில் நுழைந்த பாகிஸ்தானின் சுகோய் 30 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது.
இந்த நிலையில், மீண்டும் ராஜஸ்தானின் பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.