அரசு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விவகாரம்... தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் விளக்கம் அளிக்க உத்தரவு
டெல்லி : அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்களின் படத்தை அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்காடு மையம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இடம்பெறக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு, கர்நாடகம், அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணை அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.