ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் நிதி:ஓய்வுபெற்ற ஐஏஎஸ் பாலச்சந்திரனுக்கு ஒரு விசில் போடுங்க
ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
பெங்களூரு : ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இது தான் மிக அதிகத் தொகை.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 45 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்காக பலரும் நிதி கொடுத்து வந்த போதும், நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
கமல் ரூ. 20 லட்சம்
தமிழக அரசு தன்னுடைய பங்காக தமிழ் இருக்கை அமைக்க ரூ. 10 கோடி நிதி உதவி தருவதாக கூறியுள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தமிழ் இருக்கைக்காக ரூ. 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
ரூ. 25 லட்சம் நிதி
இதே போன்று நடிகர் விஷாலும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இதே போன்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரனும் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
சிவகங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் மேற்குவங்க மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஊழல் விவகாரத்தில் தைரியமாக தன்னுடைய பணிக்காலத்திலேயே முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் பாலச்சந்திரன். இந்தியாவைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ரூ. 25 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார், இதுவரை பெறப்பட்ட நிதிகளிலேயே இது தான் அதிக நிதியுதவி.
தமிழ் ஆசிரியர் தந்தது தான்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் நிதியுதவி அளித்ததை விட 82 வயது ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ரூ. 8 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் இருக்கை அமைக்க முடிந்தவர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.