சுயசரிதை எழுதுகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்.. வருகிறது அடுத்த அணுகுண்டு?
உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் சுயசரிதை புத்தகம் எழுத முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தா : நீதித்துறையில் செய்ய வேண்டிய சீர் திருத்தங்கள் குறித்து தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் எழுத ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் திட்டமிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் நாட்டிலேயே முதன் முறையாக நீதிபதியாக இருந்த போதே 6 மாத சிறைத் தண்டனை உத்தரவிற்கு ஆளானர் தமிழகத்தை சேர்ந்த கர்ணன். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்னரே கர்ணன் தலைமறைவானார். இந்நிலையில் ஜூன் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் கோவை அருகே கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கொல்கத்தா பிரெசிடென்சி சிறையில் உள்ள கர்ணன், 6 மாத சிறைக் காலத்தில் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளார். இந்த சுயசரிதையின் முக்கியமாக சிறைத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கர்ணன் திட்டமிட்டுள்ளார். மேலும் நீதிபதிகள் நியமனம், 1971 நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது என்பவை இடம்பெற உள்ளதாக நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா கூறியுள்ளார்.
முக்கிய அம்சங்கள் என்ன?
தற்போது நீதிபதிகள் நியமனம் கொலிஜியம் முறையில், இந்திய தலைமை நீதிபதி மடற்றும் 4 மத்த நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் நியமனமும், பணியிட மாற்றமும் நடைபெறுகிறது. ஆனால் கர்ணன் தன்னுடைய சுயசரிதையில் வெளிப்படையான முறையில் நீதிபதி நியமனம் இருக்க வேண்டும். காலியிடங்கள் மற்றும் விண்ணப்ப முறையில் நீதிபதி நியமனம் நடத்த வேண்டும் என்று கூற உள்ளதாக நெடும்பாரா கூறியுள்ளார்.
கைகளால் எழுதுகிறார்
நீதிபதி கர்ணனின் சுயசரிதை புத்தகத்தை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. கர்ணன் எழுத்து மூலமாக கொடுக்கும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
ஊழ்ல் புகார் சொன்னவர்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்க எதிராகப் பல்வேறு ஊழல் புகார்களைத் தொடர்ச்சியாகக் கூறி வந்தார். அதையடுத்து அவர் கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டார்.அவர் மீது உச்சநீதி மன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
என்ன பூதம் கிளம்புமோ?
நீதிபதியாக இருந்த போதே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவை பிறப்பித்தவர் கர்ணன். தற்போது தன்னுடைய சுயசரிதையில் என்னென்ன புதிய சர்ச்சைகள் எழப் போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.