கருப்புப் பணத்தை பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட் அதிரடி!
டெல்லி: வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்தியில் முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி, லீச்டென்ஸ்டெய்ன் நாட்டின் எல்.எஸ்.டி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த 18 பேரின் பெயர்ப் பட்டியலை தாக்கல் செய்தது. அதில், அம்ரூவோனா தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் மனோஜ் துபேலியா, அம்ப்ரீஷ் துபேலியா, பவ்யா மனோஜ் துபேலியா, மனோஜ் துபேலியா, ரூபால் துபேலியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும் சிலரது பெயர் விவரங்களை சீலிட்ட உறையில் ரகசியமாகத் தாக்கல் செய்தது. எனினும், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரமில்லை என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், மத்தியில் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதில் தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், பங்கஜ் சிமன்லால் லோடியா, ராதா சதீஷ் டிம்ப்லோ ஆகிய மூவரும் கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கியவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மத்திய அரசு ஏன் 3 பேரின் பெயர்களை மட்டும் வெளியிட்டது?. கருப்புப் பணத்தைப் பதுக்கிய மற்றவர்களை மத்திய அரசு ஏன் பாதுகாக்க முயற்சிக்கிறது?. அவர்களைப் பற்றி அரசுக்கு கவலை இல்லையா?. எதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு குடை விரிக்கிறீர்கள்?.
வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் வேலையை மத்திய அரசை நம்பி விட முடியாது என்றே தெரிகிறது. இது எங்களது வாழ்நாளில் நடக்குமா என்பது சந்தேகமே...
வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களின் முழுமையான பட்டியலை நாளைக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து மத்திய அரசுக்காக வாதாட வந்த அட்டர்னி ஜெனரல் மறு பேச்சே பேசாமல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.