பியாஸ் நதி வெள்ளத்திற்கு காரணம் ஒன்றல்ல.. இரண்டு அணைகளை ஒரே நேரத்தில் திறந்ததுதான்!!
டெல்லி: இமாசலபிரதேசத்தில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாணவர்கள் உயிரிழக்கக் காரணம் அங்குள்ள இரண்டு அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் அணைகளை திறந்துவிட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர்கள் அங்குள்ள பியாஸ் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 24 மாணவ - மாணவிகள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இவர்களில் 6 பேர் உடல்கள் மட்டுமே மீட்க முடிந்தது.
விபத்து நடந்து 4 நாட்கள் ஆன பின்னரும் மற்றவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை.
ஆற்றில் வெள்ளம்
தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் பனிக்கட்டி போன்று குளிர்ந்த ஆற்று நீரில் 5 நிமிடத்துக்கு மேல் மூழ்கி இருக்க முடியாததாலும் உடல்களை கண்டு பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
நவீன கேமரா உதவியுடன்
இதையடுத்து மீட்பு பணிக்கு ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. மேலும் ஆள் இல்லாத விமானம் மூலம் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தண்ணீருக்குள் நவீன கேமிராவை பொருத்தியும் தேடப்பட்டது.
மேலும் இருவர் உடல் மீட்பு
இந்த நிலையில் நேற்று மேலும் 2 மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து நடந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே பாறை இடுக்கில் இருந்து கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த உபேந்தர், ஐதராபாத்தைச் சேர்ந்த அரவிந்த் ஆகியோர் சடலங்கள் கிடைத்தது.
தேடுதல் வேட்டை
இதனால் மற்றவர்கள் பிணமும் அதே இடத்தில் இருக்கும் என கருதப் படுகிறது. அங்கு நவீன தொழில் நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஹைதராபாத்தில் இருந்து 15 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு நேற்று இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்து உள்ளது.
17 பேரின் உடல்கள் எங்கே
இதுவரை 8 பேர் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. 17 மாணவ-மாணவிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோரின் சடலங்கள் இன்னும் கிடைக்க வில்லை. அவர்களின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட அணை
இதனிடையே பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரே நேரத்தில் இரண்டு அணைகளை திறக்கப்பட்டது தெரியவந்துள்ளது. லார்ஜி அணையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பார்வதி அணையில் இருந்து முதலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில் லார்ஜி அணை நிறைந்த உடன் அங்கிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
25 உயிர்கள் பலியாக காரணம்
அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதற்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்படாததும், அரசின் அக்கறையின்மையுமே 25 மாணவர்கள் உயிர் பலியானதுக்கு காரணம் என்று லார்ஜி அணை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சடலங்களை மீட்கும் பணி
இதனிடையே மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை குறைத்துள்ளதாக அமைச்சர் அணில் ஷர்மா தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மாணவர்களின் உயிரிழப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.