கவாஸ்கர் பெயரை எப்படி சுப்ரீம் கோர்ட் தேர்வு செய்தது?.. சுவாரஸ்யமான தகவல்!
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவர் பதவிக்கு கவாஸ்கரின் பெயரை ஏன் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்பது தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஏ.கே. பட்நாயக்தான், கவாஸ்கர் பெயரை வலியுறுத்தி அவரை இடைக்காலத் தலைவராக அறிவித்துள்ளார்.
நீதிபதி பட்நாயக் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
சால்வே போட்ட விதை
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கிட்டத்தட்ட 150 நிமிடங்கள் வாதாடினார். அவரது வாதத்தின்போதுதான் கவாஸ்கரின் பெயர் அங்கே ஸ்பாட்லைட்டுக்கு வந்ததாம்.
டோணியை வெளுத்து வாங்கிய சால்வே
சால்வே தனது விவாதத்தின்போது முத்கல் விசாரணைக் கமிட்டி முன்பு உண்மையை மறைத்து வாக்குமூலம் அளித்துள்ளார் கேப்டன் டோணி என்று சால்வே குற்றம் சாட்டினார்.
சச்சினே வாக்குமூலம் அளித்துள்ளார்
மேலும் அவர் கூறுகையில், முத்கல் கமிட்டி முன்பு புகழ் பெற்ற வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, கும்ப்ளே, டிராவிட் போன்ற வீரர்கள் எல்லாம் உண்மையான வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
சரி கவாஸ்கரை ஏன் விட்டீர்கள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பட்நாயக், ஏன் கவாஸ்கரை இதில் விட்டீர்கள். அவர் என்னவானார்... அவர் தற்போது எங்கே இருக்கிறார். நன்றாக இருக்கிறாரா.. எந்தப் பணிக்கும் பொருத்தமானவராக இருக்கிறாரா என்று அடுத்தடுத்துக் கேட்டுள்ளார் நீதிபதி பட்நாயக்.
நல்ல பொருத்தம்
அதற்குப் பதிலளித்த சால்வே, அவர் நன்றாக இருக்கிறார், மிகவும் பொருத்தமாக இருக்கிறார். தற்போது அவர் கிரிக்கெட் வர்னணைகளைச் செய்து கொண்டிருக்கிறார். நீதிபதி விரும்பினால் முழு விவரத்தையும் திரட்டித் தரத் தயாராக இருக்கிறேன் என்றார்.
புன்னகையுடன் ஒரு குறிப்பு
இதைக் கேட்ட நீதிபதி பட்நாயக் புன்னகைத்தபடி குறிப்பில் எதையோ எழுதிக் கொண்டாராம்.
சரி கவாஸ்கர்தான் தலைவர்
சால்வேயின் விவாதம் முடிந்த பின்னர் கவாஸ்கர் அல்லது வேறு ஒரு பிரபல முன்னாள் வீரரை சீனிவாசனுக்குப் பதில் தலைவராக நியமிக்கலாம் என்ற பரிந்துரயை பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் பரிந்துரைத்தது.
ஆனா கவாஸ்கரும் பிசினஸ்காரர்தானே
அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் ராகுல் மேஹ்ரா, கவாஸ்கரும் கூட பிசிசிஐயுடன் வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.
பரிந்துரைதான் இது
இதைக் கேட்ட நீதிபதி பட்நாயக் குறுக்கிட்டு, நான் கவாஸ்கரின் பெயரை பரிந்துரையாகத்தான் கூறுகிறேன். கட்டாயப்படுத்திச் சொல்லவில்லை என்று விளக்கினார்.
கிரிக்கெட் விளையாடிய நீதிபதி
நீதிபதி பட்நாயக் முன்பு கிரிக்கெட் வீரராக இருந்தவர். அதாவது அமெச்சூர் வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படித்தான் கவாஸ்கர் பெயர் இடைக்காலத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்பட்டு இன்று உத்தரவாகவே பிறப்பிக்கப்பட்டு விட்டது.