ஆந்திராவின் புதிய தலைநகர் 'அமராவதி' ...கிருஷ்ணா நதிக் கரையோரத்தில்....!
ஹைதராபாத்: அமராவதி.. ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகராக அமைய இருக்கிறது.. இதற்கான அறிவிப்பை ஆந்திரா அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்க இருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தெலுங்கானாவின் தலைநகரானது ஹைதராபாத். இரு மாநிலங்களுக்கும் 10 ஆண்டுகாலம் பொது தலைநகராக ஹைதராபாத் இருக்கும்.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலத்துக்கான தலைநகரை குண்டூருக்கும் விஜயவாடாவுக்கும் இடையே அமைக்க ஆந்திரா அரசு முடிவு செய்தது. தற்போது கிருஷ்ண நதிக் கரையோரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க புத்த மத தலமான அமராவதியையே ஆந்திராவின் தலைநகராக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமராவதி நகரம் என்பது தற்போது தலைநகராக தேர்வு செய்த இடத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. புதிய தலைநகரத்துக்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய தலைநகரமானது குண்டூர் மாவட்டத்தின் துல்லூரு, மங்களகிரி, தாடிகொண்டா மண்டலங்களில் உள்ள 29 கிராமங்களுக்கு விரிந்து கிடக்கும். இப்புதிய நகரை நிர்மாணிக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.