கர்நாடகாவில் கெமிஸ்ட்ரி வினாத்தாள் லீக் ஆனதற்கு பழிவாங்குதல் தான் காரணமா?
பெங்களூர்: கர்நாடக மாநில பி.யூ கல்வி ஆணையத்தின் தலைவி பல்லவி ஆக்ருதியை பழிவாங்க பிளஸ் டூ வேதியியல் வினாத்தாளை சிலர் கசியவிட்டது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வுகள் நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி மாணவ, மாணவியர் வேதியியல் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் ஏற்கனவே கசிந்த விபரம் தெரிய வந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேதியியல் தேர்வு மார்ச் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று வினாத்தாள் மீண்டும் கசிந்ததால் தேர்வு ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 10 நாட்களில் 2வது முறையாக வினாத்தாள் கசிந்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பி.யூ. கல்வி ஆணையத்தின் தலைவியான பல்லவி ஆக்ருதி ஆணையத்தில் களையெடுக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் பல அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்துள்ளார். இது குறித்து மாநில அரசிடம் அவர் ரகசியமாக அறிக்கையும் சமர்பித்துள்ளார். ஆனால் அவர் அளித்த அறிக்கையில் இருந்த அதிகாரிகளின் பெயர்கள் எப்படியோ கசிந்துவிட்டது.
இதனால் கடுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்லவியை பழிவாங்க முடிவு செய்து வினாத்தாளை கசிய விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வினாத்தாளை கசிய விட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.