ஆதர்ஷ் விசாரணை அறிக்கை- உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு நெருக்கடி?
டெல்லி: ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விசாரணை அறிக்கையை மகாராஷ்டிரா அரசு மறுபரிசீலனை செய்ய இருப்பதால் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் பற்றிய விசாரணை அறிக்கையில் முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், மறைந்த விலாஸ்ராவ் தேஷ்முக், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் சுசில்குமார் ஷிண்டே உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த அறிக்கையை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி அரசு நிராகரித்தது. இதற்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மகாராஷ்டிரா அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார்.
இந்நிலையில் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் விசாரணை அறிக்கையை மகாரஷ்டிரா அரசு மறுபரீசிலனை செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மறுபரிசீலனை செய்தால் உள்துறை அமைச்சர் பதவி வகிக்கும் சுசில்குமார் ஷிண்டேவுக்கு நெருக்கடியான சூழ்நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது.