காளை ஒரு விலங்கு; ஜல்லிக்கட்டு கொடூரமானது..அனுமதிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
தமிழகத்தின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டு கொடூரம் என்கிறது உச்சநீதிமன்றம்.
டெல்லி: தமிழர்களின் கலாசார அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டு மிக கொடூரமானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. தமிழர்களின் நெடிய பண்பாட்டு அடையாளங்கள் அழியாத ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்து வருகிறது.
நடக்காத ஜல்லிக்கட்டு
சில அதிமேதாவி விலங்குகள் நல ஆர்வலர்களால் காட்டு விலங்குகளுடன் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளையும் சேர்த்தது மத்திய அரசு. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
அறிவிக்கை
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரி அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. அதற்கும் தமிழர் விரோத சக்திகள் தடை ஆணை பெற்றன.
சீராய்வு மனு
இதனால் தடையை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று, ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதே மிக கொடூரமானது; அதற்கு பிறப்பித்துள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது எனக் கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டு இல்லை?
அத்துடன் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது.