சிறுபான்மை மக்களிடத்தில் பீதியை கிளப்பும் எதிர்க்கட்சிகள்: நிதின் கட்காரி குற்றச்சாட்டு!
டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினரிடையே பாரதிய ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகளே அச்சத்தையும் பீதியும் உருவாக்கி வருகின்றன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சாடியுள்ளார்.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மும்பையைச் சேர்ந்த ஜூலியோ ரிபைரோ, மும்பை காவல்துறை ஆணையராக பணியாற்றியவர். குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் டி.ஜி.பி.யாக, ருமேனியாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேட்டில் கடந்த 17-ந் தேதியன்று, "என்னுடைய சொந்த நாட்டிலேயே ஒரு அன்னியனாக இருப்பதைப் போல உணர்கிறேன்.. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன" என விவரித்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதியிருந்தார்.
இந்த கட்டுரையில் இந்தியாவிலேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களிடையே பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது என்றும் அவர் பதிவு செய்திருந்தார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது:
நான் பிரதமர் மோடியிடம் ரிபைரோவின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் பற்றி விவாதித்தேன். ஜூலியோ ரிபைரோவை நான் ஒரு சிறுபான்மை சமூகத்தவராக பார்க்கவில்லை.
அவர் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமானவர்.. இந்த நாட்டுக்காக அவர் அரும் பணிக\ள் ஆற்றியுள்ளார்.. அவரைப் போல திறமையான நேர்மையான அதிகாரியை மும்பையில் பார்க்க முடியாது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.. அவரது கட்டுரை எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினேன்.
இதற்கு என்னிடம் பதிலளித்த பிரதமர் மோடி, சிறுபான்மையினர் சர்ச் அல்லது மசூதி மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிற யாரையும் நாம் பாதுகாக்கப் போவதில்லை.. சட்டம் ஒழுங்கு என்பது நமது பொறுப்பு.. நாம் சிறுபான்மையினரை நிச்சயம் பாதுகாப்போம் என உறுதியளித்தார்.
எதிர்க்கட்சிகள்தான் மோடி அரசை சிறுபான்மை அரசாக சித்தரிக்கின்றன... சிறுபான்மையினர் அச்சத்தை தங்களுக்கான முதலீடாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. அத்துடன் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே இருக்கிறது; ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து கிறிஸ்தவ பாதிரியாரை மீட்டு கொண்டு வந்திருக்கிறது. எங்களது கட்சியில் ஒரு சிலர் தவறான அறிக்கைகளைக் கொடுத்திருக்கலாம்.. அது குறித்து நாங்கள் விளக்கம் தெரிவித்திருக்கிறோம்.
நாங்கள் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுகிறோம்.. ஆனால் எதிர்க்கட்சிகளோ வாக்கு வங்கி அரசியலேயே கவனம் செலுத்துகின்றன.. சிறுபான்மையினரிடத்தில் அச்சத்தை எதிர்க்கட்சிகளே உருவாக்குகின்றன.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.