பணக்கார எம்.பி. க்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுக்க வருண் காந்தி வலியுறுத்தல்
பணக்கார எம்.பி.,க்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று வருண் காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லி : பணக்கார எம்.பி.,க்கள் தங்களின் மாத ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது எம்.பி.,க்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கும் பல எம்.பி.,க்கள் தங்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்தை விட்டுத் தருவதன் மூலம், அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறையும் என்று வருண் காந்தி தனது கடித்தத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதி பாஜக எம்.பி.,யான வருண் காந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பாஜக கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதாரச் சமத்துவமின்மை, விவசாயிகள், வேளாண் சார்ந்த பிரச்சினைகளைக் குறைக்க வசதிபடைத்த எம்.பி.க்கள் தங்கள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு எம்.பி. தற்போது ரூ.2.70 லட்சம் ஊதியம் பெறுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் எம்.பி.,க்கள் ஊதியம் 4 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களின் செயல்பாடு, நாடாளுமன்றத்தின் செயல்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது.
உத்தரப்பிரதேச சட்டசபையும் எம்.எல்.ஏ.க்கள் ஊதியத்தை ரூ.1.17 லட்சத்தில் இருந்து ரூ.1.87 லட்சமாக உயர்த்த முடிவு செய்து மசோதா தாக்கல் செய்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் எம்.எல்.ஏ.,க்கள் ஊதியமும் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுவிட்டது.
கடந்த 2009ம் ஆண்டில் லோக்சபாவில் 319 எம்.பி.,க்கள் ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருந்தனர். தற்போதயை லோக்சபாவில் இருக்கும் எம்.பி.,க்களில் 24 சதவீதம் பேர் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கிறார்கள்.
சராசரியாக ஒவ்வொரு எம்.பி.,க்கும் 14.61 கோடி ரூபாய் என்கிற அளவில் சொத்துக்கள் இருக்கின்றன. ராஜ்யசபாவில் இருக்கும் 96 சதவீத எம்.பி.,க்கள் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 20.12 கோடியாகும்.
கடந்த 2016ம் ஆண்டு லோக்சபா எம்.பி.,க்களின் ஊதியத்துக்கு மட்டும் ரூ.176 கோடி செலவு செய்துள்ளது. பணக்கார எம்.பி.,க்கள் தங்களது சம்பளத்தை விட்டுத்தருவதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாயை அரசு வளர்ச்சித் திட்டங்களில் செயல்படுத்த முடியும் என்று வருண் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.