251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட் போன்.. விற்பனையை ஆரம்பித்தது 'ரிங்கிங் பெல்ஸ்'
மும்பை: 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் 251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட் போனை இன்று முதல் வினியோகிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் மொஹித் கோயல், நிருபர்களிடம் கூறியது:
முதல் கட்டமாக 5,000 "ஃபிரீடம் 251' ஸ்மார்ட் போன்களை வெள்ளிக்கிழமை முதல் வினியோகிக்க இருக்கிறோம். எங்கள் இணையதளத்தில் 30 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மலிவு விலை ஸ்மார்ட் போனுக்காக முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் 7 கோடி பேர் இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய முயற்சித்துள்ளனர்.
அரசின் ஆதரவு இருந்தால் எங்களால் மலிவு விலையில் 2 லட்சம் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து மக்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகிலேயே மிகக்குறைந்த விலையாக 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய இருப்பதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படி ஸ்மார்ட் போன் வழங்க முடியும்? என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, அந்த நிறுவனம் குறித்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ஆய்வைத் தொடங்கினர். சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது.
பின்னர், பொருள் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தும் முறையில் மலிவு விலை ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்தது. அதன்படி இப்போது ஸ்மார்ட் போன் விநியோகிக்கப்பட இருக்கிறது.
ரூ.9,990 ரூபாய்க்கு மலிவு விலை எல்இடி டிவி, ரூ.4,000 முதல் 4,499 வரையிலான ஸ்மார்ட் போன்களையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.